திருச்சி: “என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்துகொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள்.பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா?” என்றார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் குற்றச் செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டுக்கு காரணமாகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது. இதைத் தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் பொறுப்புள்ளது.
சாதி அரசியலாக மாறி அதிகாரத்துக்கு வந்தால் சமத்துவம் அழியும். மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும். பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
எதிர்காலத்தில் பத்திரமாக நம் குழந்தைகளை இந்த பூமியில் விட முடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஆட்சியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஆட்சியாளர்களை தேர்வு செய்த மக்களும் பொறுப்பேற்க வேண்டும்.
தொடர்ந்து 60 ஆண்டுகளாக தவறு செய்யும் ஆட்சியாளர்களையே தேர்வு செய்து, இதே அதிகாரங்களே நிறுவப்பட்டு வந்தால் என்ன மாற்றம் நிகழும்?
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். அந்த வகையில் புதிய கட்சி தொடங்கி உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில் இருந்து கொண்டு தனியார்மயத்துக்கு எதிராக திமுக போராடுவதாக கூறுவது வேடிக்கை. தனியார்மயத்துக்கு கையெழுத்து போட்டதே திமுக தான். தூய்மைப் பணியாளர், கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கெனவே தனியார்மயமாகிவிட்டன. சாரயக்கடை தான் அரசிடம் உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் போடும் குண்டை விட திமுக தனியார்மயத்துக்கு எதிராக போராடும் என்பது பெரும் குண்டாக இருக்கிறது.
பெரிய பொருளாதார பின்னணி இல்லாத எளிய பிள்ளைகளான நாங்கள் முன்கூட்டியே ஓடத் தொடங்க வேண்டும். அவர்கள் செய்தித்தாள்களில் முன்பக்கம் விளம்பரம் கொடுப்பர். எங்களுக்கு அதற்கு வசதியில்லை. எனவே முன்கூட்டியே வாக்காளர்களை சந்தித்து அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறோம்.
தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. உலக நாடுகள் தலையிட்டு ஈரான் – இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும்.
என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்து கொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள். பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா?
குடும்பத் தலைவிக்கு ரூ.2,000 தருவேன் என்கின்றனர். நான் கூட மாதம் மாதம் ரூ.50,000 தரலாம் என நினைக்கிறேன். எதையாவது சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்” என்றார் சீமான்.