சீமான் பிரச்சாரம்
சேலம்: “அதிமுகவும் திமுகவும் மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக, திமுக அமைச்சர்கள் போட்டியிடப் போகும் இடங்களில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்” என சேலத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் சோபியா வீரசமர், மேற்கு தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார், வடக்கு தொகுதி வேட்பாளர் குணசீலா, வீரபாண்டி தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “ஊழல் இல்லாத ஆட்சி மற்ற நாடுகளில் எப்படி நடக்கிறது என்பதை சமூக வலைதளம் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில் அரசு நடத்தும் அனைத்து கட்சிகளும் தரமாக உள்ளது. ஆனால், இங்கே அரசு நடத்தும் அனைத்தும் தரங்கெட்டு கிடக்கிறது. எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு சாராயத்தை மட்டும் அரசு வைத்திருக்கிறது. தனியாரை விட சிறந்த சேவைகளை அனைத்து துறைகளிலும் வழங்க வேண்டும். அதற்கேற்ப மாற்றத்தை கொடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட நான்கு கட்சிகள் இருந்தால் எந்தக் கட்சி சிறந்த ஆட்சி இருக்கும் என எண்ணி ஆதரவளியுங்கள்.
வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள், ஒவ்வொரு வாக்கும்தான் மாற்றத்தை உருவாக்கும். நானே விவசாயம் செய்து நச்சு இல்லாத தூய உணவை அளிப்பேன். மின் உற்பத்தி, காற்றாலை மின்சாரத்தை நானே வழங்குவேன். வேலை இல்லை என்ற சொல்லை மாற்றுவேன்” என்று அவர் பேசிானர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “பாஜக மதவாத கட்சி எனக் கூறி திமுக வாக்கு சேகரிக்கும். மறுபுறம் காங்கிரஸ் பற்றி பாஜக பேசும். இந்த நாட்டை நாசமாக்கியதே காங்கிரஸ் கட்சிதான். கச்சத்தீவை தாரை வார்த்தது, நச்சு ஆலைகளை விதைத்தது காங்கிரஸ். திமுக எந்த வகையில் காங்கிரசை நியாயப்படுத்தி பேச முடியும்? ஜிஎஸ்டி, நீட், என்ஐஏ போன்ற அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ் தான்.
அதிமுகவும் திமுகவும் மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள் போட்டியிடப் போகும் இடங்களில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விஜய் இலவசங்கள் கூடாது எனக் கூறியவர், தற்போது இலவசங்களை அறிவித்துள்ளார். இலவசம் என்பது திட்டமல்ல; அது வீழ்ச்சிக்கு வித்தாகும். திமுக, அதிமுக, விஜய் யார் இலவசங்கள் அறிவித்தாலும் அந்தப் பணத்தை ஈடு செய்ய எங்கிருந்து எடுப்பீர்கள். இலவசங்களை எதிர்ப்பவன் நான்” என்று சீமான் கூறினார்.