சென்னை: “வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தில் நாளை முதல் ஜன.22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜன.19) முதல் ஜன.22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23-ம் தேதி கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி அதிகபட்சமாக சமவெளிப்பகுதியான தருமபுரியில் 15.2 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளான கொடைக்கானல் மற்றும் உதகமண்டலத்தில் 7 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.