அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்று உபரிநீரை நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் எடுத்து அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள வறட்சிப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் 70 ஆண்டுகால கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியின் போது இந்தத் இட்டத்துக்காக ரூ.1,756 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்து 2024 ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு 5 சதவீதம் நீர் கூட வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அத்திக்கடவு- அவிநாசி திட்ட பாதுகாப்புக் குழு நிர்வாகி முருக பூபதி கூறியதாவது: இந்தத் திட்டத்தில் 1,045 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன. இதற்காக மொத்தம் 6 நீரேற்று நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் 5, 6-வது நீரேற்று நிலையங்களில் மட்டுமே 600-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருக்கின்றன. அவற்றில் 20 சதவீத குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் ஓரளவுக்கு வந்திருக்கிறது.
80 சதவீதம் குளங்களுக்கு S சதவீதம் கூட தண்ணீர் செல்லவில்லை. காரணம் திட்டத்தின் வடிவமைப்பிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப் பராமரிக்கும் தனியார் நிறுவனமும் முழு கவனம் செலுத்தவில்லை. ஆண்டில் 70 நாட்கள் தான் ஆற்றில் இருந்து இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. அப்போதும் கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்குக் காலத்திலாவது 24 மணி நேரமும் தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
6 நீரேற்று நிலையங்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டால்தான், தண்ணீர் ஒன்றாவது நிலையத்தில் இருந்து, 6-வது நிலையம் வரை செல்லும். இவற்றில் ஏதாவது ஒரு நிலையத்தில் பிரச்சினை என்றாலும் ஒட்டுமொத்தமாக 6 நீரேற்று நிலையங்களும் செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைகளையெல்லாம் அரசு சரி செய்ய வேண்டும். கடந்த மாதம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
அப்போதுகூட அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கவில்லை. மழைக்காலம் தொடங்கினால், பவானி ஆற்றில் உபரிநீர் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் குழாய். மோட்டார். பழுதுகளை சீரமைத்து திட்டத்துக்கான 1.5 டிஎம்சி தண்ணீரையும் எடுக்க வேண்டும், என்றார்.
இதுகுறித்து இத்திட்ட பொறியாளர்கள் கூறியதாவது: அத்திக் கடவு- அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்.சி தண்ணீர் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 1.3 டிஎம்சி கொடுத்துவிட்டோம். இதனால் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்திருக்கின்றனர். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 70 நாட்கள் தண்ணீர் கொடுப்பதுதான் திட்டம்.
தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருந்ததால் பவானி ஆற்றில் கிடைத்த உபரிநீர் மூலம் தற்போதுவரை 811 குளங்களுக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறோம். மீதியுள்ள 235 குளங்களுக்கு விரைவில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 70 நாட்கள் தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதியுள்ள 10 மாதங்கள் 6 நீரேற்று நிலையங்களும் செயல்படாமல் இருப்பதால் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து வருகிறோம். என்றனர்.