சென்னை: சென்னைக்கு பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளவு 13,222 மில்லியன் கனஅடி.
ஜூலை 3-ம் தேதி நிலவரப்படி, 6,139 மில்லியன் கனஅடி நீர் (46.43 சதவீதம்) மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 7,670 மில்லியன் கனஅடி இருந்தது. கடந்த ஆண்டை விட இப்போது 1,531 மில்லியன் கன அடி குறைவாக உள்ளது.
இந்த ஏரிகளில் இருந்து நேற்று சுமார் 1089 மில்லியன் லிட்டர் குடிநீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக 155 மில்லியன் லிட்டர் என நாளொன்றுக்கு 1,244 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1,097 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 19 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
மாநகருக்கான நீர்த்தேவை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தற்போது மழையும் குறிப்பிடும்படியாக பெய்யவில்லை. இந்த ஆண்டு எல்நினோ ஆண்டு எனவும் வானிலை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. அதனால் தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 6 டிஎம்சிக்கு மேல் குடிநீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு, ஒரு மாதம் விநியோகிக்க 1 டிஎம்சி நீர் தேவை. அதனால் இப்போது உள்ள குடிநீரை 6 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
இது மட்டுமல்லாது, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக நாளொன்றுக்கு 157 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. மேலும் கிருஷ்ணா நதி நீரை திறக்கக்கோரி நீர்வளத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரிக்கும் நீரை திறந்துவிட நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பிறகு அக்டோபரில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிடும். அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.