ஓபிஎஸ் அணியில் இருந்துவிட்டு அண்மையில் மீண்டும் அதிமுக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அரவணைத்திருக்கிறார் பொதுச்செயலாளர் பழனிசாமி.
கடந்த 1972-ம் ஆண்டுக்கு முன்பு திமுக-வில் இருந்த வெல்லமண்டி நடராஜன், எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கியபோது, எம்ஜிஆர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அதிமுக-வில் சேர்ந்தார். எம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிரிந்ததது. அப்போது, ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
திருச்சியை சேர்ந்த இவர், 2016-ல் ஜெயலலிதா மற்றும் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 2017-ல் ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரன் அணி எனப் பிரிந்தபோது, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதன் பிறகு பழனிசாமி, தினகரன் அணி உருவானபோது, பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். 2021-ல் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தபோது ஓபிஎஸ் பக்கம் நின்றார் நடராஜன். அதனால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இருந்து நடராஜன் எடுத்த நிலைப்பாடுகள் எல்லாம் சரியாகவே இருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு அவரது அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்தியது. தற்போது ஓபிஎஸ்ஸும் அவரது விசுவாசிகளும் திமுக-வில் ஐக்கியமான நிலையில், அதை ஏற்க மனமின்றி அண்மையில் மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். அவருக்கு தற்போது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அங்கீகரித்திருக்கிறார் பழனிசாமி.
தற்சமயம் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் பக்கம் இருக்கும் அதிமுக-வினர் பலரும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் இன்றி அதிருப்தியுடன் இருந்து வருகின்றனர். அரசியல் எதிர்காலம் கருதி அதிமுக-வுக்கே மீண்டும் சென்றுவிடலாமா என்ற ஊசலாட்டத்திலும் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அதிமுக-வுக்கு இழுக்கும் விதமாகவே வெல்லமண்டி நடராஜனுக்கு பழனிசாமி அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தனது இந்த நடவடிக்கையின் மூலம், தவறை உணர்ந்து மீண்டும் அதிமுக-வுக்கு திரும்புவோருக்கு கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை சூசகமாக பழனிசாமி தெரிவித்திருக்கிறார். விஜய் வரவால் தேர்தல் களம் கடுமையாக இருக்கும் என்பதால் பிரிந்து போனவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி.