சென்னை: தமிழகத்தின் மின் தேவை, மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் (28-ம் தேதி) மின் நுகர்வு 470 மில்லியன் யூனிட்டாகவும் மின் தேவை 21,211 மெகாவாட்டாகவும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரித்துள்ளால் வீடுகளில் எந்த நேரமும் மின் விசிறிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவு நேரங்களில் குளிர்சாதன பெட்டி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தின் தினசரி மின்சார தேவை சரசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிகரிக்கும். இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு முன்பாக தமிழகத்தில் அதிகபட்ச மின் தேவை கடந்த 2024ம் ஆண்டு மே 2ம் தேதி 20,830 மெகாவாட்டாகவும், அதிகபட்சம் மின் நுகர்வு 2024ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி 454.32 மில்லியன் யூனிட்கள் பதிவானது. தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4-ம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பின் இந்த ஏப்ரல் மாதத்திலேயே 3 முறை அதிகபட்ச மின் தேவை மற்றும் மின் நுகர்வு பதிவாகியிருக்கிறது. மின் தேவையை பொறுத்தவரை கடந்த 17-ம் தேதி 21,010 மெகாவாட்டாகவும், 22-ம் தேதி 21,051 மெகாவாட்டாகவும் பதிவான நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.28) 21,211 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல மின் நுகர்வு கடந்த 18-ம் தேதி 462.66 மில்லியன் யூனிட்களாகவும், ஏப்.23-ம் தேதி 466.16 மில்லியன் யூனிட்களாக பதிவான நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.28) 470.67 மில்லியன் யூனிட்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து இடங்களிலும் குளிர்சாதன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது, இதனால் மதிய நேரத்தில் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கிறது.
மேலும் இரவு நேரங்களிலும் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. வெயிலினால் மின் தேவை அதிகரித்தாலும், அந்த தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்ய சூரிய சக்தியே உதவுகிறது. நேற்று முன்தினம் பதிவான மின் தேவையை விட மொத்த மின் உற்பத்தி அதிகமாகவே இருந்தது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.