சென்னை: பண்டிகை கால செலவுகளுக்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் வழங்கப்படும். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்குப் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், டாஸ்மாக் ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அமைச்சர் விக்னேஷ் பேரவையிலேயே அறிவித்தார். அதன்படி, பண்டிகை கால செலவீனமாக அனைவருக்கும் அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் முன்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் தகுதியுடைய அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை ரூ.20 ஆயிரம் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படும். இந்தத் தொகை எந்த வித வட்டியும் இல்லாமல் 10 மாதங்களுக்குத் தவணை முறையில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
இதனை ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம். முன்பணம் வாங்கும் ஊழியரின் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும்.
அது முடிந்த பிறகு அடுத்து முன்பணம் வழங்கும் நடைமுறை தொடரும். ஊழியர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் பண்டிகை குறித்தான விளக்கங்களை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கும்பட்சத்தில் அவர்களுடைய சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கில் முன்பணத்தை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
ஒருவேளை ஊழியர் முழு தொகையையும் செலுத்துவதற்கு முன்பாக பணியில் இருந்து விலகினாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ அவருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் இருந்து மீதமுள்ள முழு தொகையும் ஒரே தவணையாகப் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு டாஸ்மாக் நிர்வாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்களுக்கு ஆண்டுக்கு 3 சீருடைகள் மற்றும் தையல் செலவுகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினையுடன் சீருடைக்கான வடிவமைப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விற்பனை மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு வெளிர் பழுப்பு நிற சட்டை, அடர் சாம்பல் நிற பேன்ட், மேற்பார்வையாளர்களுக்கு நீல நிற சட்டை, அடர் நீல நிற பேன்ட் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சீருடை நடைமுறையை நவ.15-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.