மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் ‘வீரவணக்கம்’ செலுத்தினர். படங்கள்: ம.பிரபு
சென்னை: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வீரவணக்கத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல், அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (101) நேற்று முன்தினம் காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன்’ இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ், கீதாஜீவன் மற்றும் அன்புமணி, பிரேமலதா, ஜி.கே.வாசன்,பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன், சீமான், சசிகலா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், இறையன்பு, பாலகிருஷ்ணன், கேரள அரசு சார்பில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் விஜயகுமார், ‘இந்து’ என்.ராம், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், த.செ.ஞானவேல், கவிஞர்கள் வைரமுத்து, சினேகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று,நல்லகண்ணு உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் வீரவணக்கம்: பின்னர், முதல்வர் தலைமையில் தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், தமிழக அரசு சார்பில் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசுமரியாதை அளிக்கப்பட்டது.
72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘பாலன்’ இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் செங்கொடியை ஏந்தி ‘வீரவணக்கம்’ செலுத்தியபடி பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
‘மறைவுக்குப் பிறகு தனது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்லகண்ணுவின் விருப்பப்படி, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு, அதற்கான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினர்.