சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு 100 வயதாகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் பிரச்சினை காரணமாக, சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் வீடு திரும்பினார். பின்னர், உணவு கொடுப்பதற்காக அவரது வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்ட பிறகு, வீடு திரும்பினார். இந்நிலையில், சுவாசிக்க உதவியாக பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவியின் குழாயை மாற்றுவதற்காக, நேற்று காலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்த குழாய் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.