பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

மக்கள் நலத்திட்டங்களை கூட சரியாக செயல்படுத்த தெரியவில்லை: தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நலத்திட்டங்களை கூட தவெக அரசுக்கு சரியாக செயல்படுத்த தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணை தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் பின்தொடர்ந்து சென்ற உங்கள் கட்சி நிர்வாகி ஒருவர், அப்பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டி இழிவாக பேசியதுடன், அத்துமீறி தாக்கியதாக வெளியாகியுள்ள காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, சாதி ரீதியாக வசைபாடுவதிலும், பெண்களிடம் அத்துமீறுவதிலும் திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு முதல்வரே. உங்கள் கட்சிக்காரர்களைக் கூட கட்டுக்குள் வைக்க முடியாத நீங்கள், தமிழகத்தில் உலாவும் கொடும் குற்றவாளிகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்?

‘அண்ணன், மாமன்’ என பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் அடைமொழிகளை உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்வது, சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என வெற்று விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்காமல், மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மண்டிக் கிடக்கும் உங்கள் கட்சியை முதலில் தூர்வாரி சுத்தப்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக விஜய் அரசு செயல்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.

எனவே, தமிழக முதல்வர் விஜய், விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT