சென்னை: மதச்சார்பின்மை என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலை மதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல்போன பதற்றம் தணிவதற்கு முன்பாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, சிறுவாபுரியில் இருந்து எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் யாத்திரையாக கொண்டு செல்லப்பட இருந்த 108 வெற்றி வேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
108 கிராமங்களின் வழிபாட்டுக்காக வழங்கப்பட இருந்த வெற்றி வேல்கள் தீயில் எரிந்து கருகுவதைப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப் போகிறது.
சட்டப்பேரவையை ‘சர்ச்’ ஆக மாற்றிய விஜய் அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாதபோது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயம் இருக்கும். அதனால்தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன.
இந்துக்கள் மீது இத்தகைய அடக்குமுறைகள், வன்முறைகள் தொடருவது ஆபத்தானது. எனவே, இச்சம்பவத்தில் தொடர்பு உடையவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதச்சார்பின்மை என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.