நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
தவெக-வுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திருச்சியில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்பது வதந்தி. கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்-க்கு தற்போது 3-வது முறையாக சிபிஐ சம்மன் கொடுத்துள்ளது. இதற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து பிரதமர் மோடி இங்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் பேசியுள்ளார் என்பதை எதிரணியினர் மறந்து விட்டார்கள். தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் திமுக என்ன செய்துள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் யாரும் கேட்பது இல்லை. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்றார்கள், 300 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள்.
மின் கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொன்னதையும் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100, பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5 குறைப்பதாக சொன்னார்கள், அதையும் செய்யவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்றார்கள், ஆனால் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. இதனால், ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் 34 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. தினமும் படுகொலைகள் நடக்கின்றன. அதேபோன்று கஞ்சா போதையில் சாலையில் செல் பவர்களை, விரட்டி விரட்டி வெட்டுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.