திருச்சி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அனைத்து உறுதிமொழிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளிட்டவற்றை மறைக்கவே ரூ.5 ஆயிரம் வழங்குகிறார்கள்.
ஆனால், இதைப் பார்த்து ஏமாற மக்கள் தயாராக இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் விடுமுறை கொடுப்பார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்தால் மாற்றம் ஏற்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாங்கள் கொடுக்கும் உறுதிமொழிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சித் தலைவர் விஜய்யை தேடிக் கொண்டிருக்கிறார். கட்சியின் மூத்த தலைவரால்கூட சந்திக்க முடியாத நபரை, சாதாரண மக்கள் எப்படி சந்திக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.