| படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ‘நடிகைகளையும், சினிமா தயாரிப்பாளர்களையும் சந்திக்க ஆர்வம் காட்டும் முதல்வர் விஜய், குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது ஏன்?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க தவறியதாக, தவெக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார், வினோஜ் பி.செல்வம் மற்றும் அர்ஜுனமூர்த்தி, நயினார் பாலாஜி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதிலும், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர்களாக இருக்கக்கூடிய எல்லோருடனும், இன்று பெண்கள் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கை தவெக அரசு உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் பதவியை விட்டு விலக வேண்டும்.
பாலியல் குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சென்று சந்திக்கத் தவறிய தமிழக முதல்வர் விஜய், நடிகைகளையும் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு நீங்களும் ஒரு காரணம். இதுதொடர்பான சிபிஐ விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதை மறந்துவிடக் கூடாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறக்கூட முன்வராத முதல்வர், அடுத்த கட்சிகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார். பாஜக வலுவான சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான இயக்கம்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், உமா பாரதி போன்ற பெரும் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போதும், பாஜக எந்தப் பாதிப்பும் அடையவில்லை. யார் வெளியே போனாலும் சரி, இந்த கட்சியை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.
கட்சியிலிருந்து வெளியே சென்றவர்கள் இன்று மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். யார் கட்சிக்கு வந்தாலும் அவர்களைத் தாயுள்ளத்தோடு வரவேற்க பாஜக தயாராக இருக்கிறது. அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். தவெக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்வரை பாஜகவின் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.