சென்னை: ‘பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்று கூறும் தவெக அரசு, மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் திட்டக்குழு அறிக்கையில், தமிழகத்தின் விமான நிலையங்கள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை விஜய் தலைமையிலான அரசு, கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக ஓர் விமான நிலையம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், ‘விமான ஓடுதளம் அமைக்க பரந்தூர் ஏற்ற இடம் இல்லை’ என தவெகவின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
அதேநேரம், பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடம் வேண்டி தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்திவிட்டார்.
அப்படியானால், அமைச்சர் நிர்மல்குமார் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று கூறினார்? பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்று கூறும் தவெக அரசு, இதுவரை மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?
எனவே, நிதி ஆயோக் அறிக்கையின்படி, தமிழகத்தின் விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் மேலும் ஓர் புதிய விமான நிலையம் அமைக்க தவெக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.