தமிழகம்

“அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்து ஏற்புடையது அல்ல” - முத்தரசன் கருத்து

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து ஏற்புடையதல்ல” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று நடத்திய நடைபயண பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது.

நாடாளுமன்றத்துக்கு தற்போது உள்ள 543 தொகுதிகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இதற்கு மாறாக நாடாளுமன்ற தொகுதிகளை 850 ஆக உயர்த்துவது கண்டனத்துக்குரியது.

தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. நிதி நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால், அதைக் காரணம் காட்டி, மக்களுக்குப் பயன்படக் கூடிய திட்டங்களை அறிவிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. தேர்தலின் போது அளித்த விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு ரூ.2,500 உதவித் தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து ஏற்புடையதல்ல” என்றார்.

SCROLL FOR NEXT