திருப்பூரில் நேற்று நடந்த பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கில் பேசிய மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல்.
திருப்பூர்: திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் கூறினார். மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கு திருப்பூரில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்க வந்த முரளிதர் மோகல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் 90 சதவீதம் திருப்பூரில்தான் தயாராகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம், மருத்துவம், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட், விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்துள்ளன.
பெண்கள் பாதுகாப்பில் 21-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் மக்கள் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக அரசுமுற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால்தான் தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தொகுதிப் பங்கீடு... மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இருந்தால்தான், கூடுதல் நலத்திட்டங்களைப் பெற முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இணக்கமான தீர்வு எட்டப்படும். விமான சேவைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பல நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவைகளில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.