திருவள்ளூர்: அடுத்த மக்களவைத் தேர்தலில் விஜய்தான் பிரதமர் வேட்பாளரா என்ற கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது என திருவள்ளூர் எம். பி. சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
திருவேற்காடு நகராட்சி 14-வது வார்டு சிவன் கோயில் தெருவில் திருவள்ளூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை, திருவேற்காடு பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.6.50 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்கு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன.
இவற்றை சசிகாந்த் செந்தில், ஆவடி எம்எல்ஏ ரமேஷ் குமார் ஆகியோர் மக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தனர். பின்னர் ஆவடி எம்எல்ஏ ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக - காங்கிரஸ் இடையே நல்ல இணக்கம் உள்ளது. எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி; இதை யாரும் அசைக்க முடியாது. திருவேற்காடு வளர்ச்சிக்காக சட்டப்பேரவையில் நாங்கள் பேசுகிறோம். எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கள்கிழமை (இன்று) எங்கள் தலைவர் நல்ல பதிலடி கொடுப்பார்.
எனவே திங்கள்கிழமை எப்போது வரும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். நல்ல ஆட்சி வேண்டும்; எங்கு தவறு இருந்தாலும் தட்டிக் கேட்போம். திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரவுள்ளன. புதிய ஒப்பந்தங்கள் வரும்போது புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதன் பிறகு குப்பை இல்லா நகரங்கள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய சசிகாந்த் செந்தில், ``முதல்வர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தலைமையில் இந்த நாடும், தமிழகமும் நல்ல பாதையில் செல்லும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்கள்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், `முதல்வர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர்' என்று தவெகவினர் கூறி வருகின்றனரே என்று கேட்டதற்கு, `கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது' என்று பதிலளித்தார்.