சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திடம் விசிக தரப்பில் இருந்து பதவிகள் கேட்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது.
எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் விசிக தரப்பில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திடம் துணை முதல்வர் பதவி கேட்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இன்னொரு புறம் திமுக, அதிமுக இணைந்து திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமைக்க இருப்பதாக ஒரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவுகிறது. தற்போது ரவிக்குமார் எம்.பி அளித்துள்ள இந்த விளக்கம் இது போன்ற தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.