மாணிக்கம் தாகூர் எம்.பி
சென்னை: “தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைகளைத் தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். அது, எப்போது நடக்கும்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதே கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இது ஒருவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாக்கும் முக்கியமான முன்னேற்றமான நடவடிக்கை. ஆணவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதிலாகும்.
இதுவே உண்மையான சமூக நீதி. குறைவான பேச்சு, அதிகமான செயல். இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் ராகுல் காந்தியின் தலைமைக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் முயற்சிக்கும் பாராட்டுகள்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எப்போது நடக்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.