முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ எனும் தலைப்பிலான மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்லடம் அருகே வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காரணம்பேட்டையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியதாவது:
தமிழ் பெண்கள் இல்லாமல் யாரும் வெல்ல முடியாது. இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும் மாநாடாக அமையும். திமுக-வுக்கு ‘மேற்கு’ சரியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மேற்கு என்பது திமுக-வின் கோட்டையாகும். அதை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்குப் பிறகு மகளிருக்கு சரிசமமாக இடம் கிடைக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நமக்காக ஆட்சி செய்கிறார். விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். மகளிர் குறித்த ரீல்ஸ்களைப் பார்த்து தவறாக நினைக்கக் கூடாது. தமிழக பெண்கள் சாதனை படைப்பவர்கள். தேர்வு எழுதப் போகவேண்டாம், கூட்டத்துக்கு வந்து நில் என்று சொல்வது திமுக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் வரை இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சிரமமின்றி கலந்து கொள்ள அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பதால், மாநாட்டுக்கு என தனி பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இல்லை. எனினும், மற்ற கட்சிகளுக்கு சொல்லப்படும் நிபந்தனைகள் எங்களுக்கும் பொருந்தும். அதனை முறையாக பின்பற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும்.
தமிழகத்தை எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாக, கடன் மாநிலமாக விட்டுச் சென்றவர் தான் பழனிசாமி. அதை இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக வளர்ந்த மாநிலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி உள்ளார். மோடி சொல்லிய தேர்தல் வாக்குறுதியான ரூ.15 லட்சத்தை முதலில் கொடுக்கட்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சியான திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. முன்னேற்றத்துக்கான திட்டங்களை, வாக்குறுதிகளைத் தான் வழங்குவோம். மதுக்கடைகளை தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைத்து வருகிறோம். மற்ற கட்சியினர் தான் கருப்புக் கொடிக்கு அஞ்சுவார்கள். நாங்கள் கருப்பில் இருந்து வந்தவர்கள். ஆகவே, எங்களுக்கு கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் கருப்புக்கு அஞ்ச மாட்டோம்” என்றார்.
இந்த நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.