கோப்புப் படம்

 
தமிழகம்

“கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா?” - துரை வைகோ

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: “தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சாதி, மதம், பணம் கடந்து தவெக ஆட்சி அமைந்துள்ளது. இதை வரவேற்கிறேன். இதன்மூலம் எளியவர்கள் உட்பட எவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாற்றம் வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளதால் சரியான அலுவலர்களை நியமித்து மாற்றத்துக்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளையில், புதிய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றியபோது ஏற்பட்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தவெகவை திராவிட இயக்கமாகவே பார்க்கிறேன். தவெக அரசுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்ததும், கூட்டணி அரசு அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

மதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT