கோப்புப் படம்: ரகு.ஆர்

தமிழகம்

தமிழகத்தில் டிச.29 முதல் ஜன.1 வரை மிதமான மழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் டிச.29-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, 29-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 30-ம் தேதி தென் கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 31, ஜன.1 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) நாளை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குளிர் அளவுகளின்படி சமவெளிப் பகுதியில் அதிகபட்சமாக மதுரையில் 18.4 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதியான ஊட்டியில் 4.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT