சென்னை: வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இன்னும் 2 அல்லது 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
இதன்காரணமாக ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. முப்பெரும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகளின் தலைவர்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அண்ணா பிறந்தநாளில் கட்சியினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். செப்.17-ல் பெரியார் பிறந்தநாளையும், திமுக தொடங்கப்பட்ட நாளையும் கட்சியினர் எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கட்சி அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும். கட்சியின் 78-ம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொடிஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.