சென்னை: உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு எளிதாக கல்விக்கடன் கிடைக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1.50 லட்சம் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கல்விக் கடன் கிடைக்க இலக்கு நிர்ணணயிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், எந்த மாணவரும் பொருளாதார சூழலால் படிப்பை இடையில் நிறுத்தாதவாறு அவர்களுக்கு பிணையின்றி கல்விக் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு எளிதாக கல்விக் கடன் கிடைக்க புதிய வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி பேராசிரியர் அல்லது பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்விக் கடன் பெறத் தேவையான வழிகாட்டுதல்களை இவர்கள் வழங்குவார்கள். இவர்களுக்கு பிரத்யேக செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோர் தொடர்பு கொண்டால், கல்விக் கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் இவர்கள் வழங்குவார்கள். மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளரை தொடர்புகொண்டு, மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வார்கள்.
கடந்த 2025-26-ம் நிதி ஆண்டில் தமிழகத்தில் 1.02 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,860 கோடி கல்விக் கடன் வழங்கப்பட் டுள்ளது. இந்த ஆண்டு 1.50 லட்சம் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கல்விக் கடன் கிடைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
தற்போது பிணையின்றி ரூ.7.50 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படு கிறது. இந்த உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். கல்லூரிக் கல்வி ஆணையர் பா.பொன்னையா, தொழில்நுட் பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.