சென்னை: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று காலை கூட்டம் தொடங்கியதும் விலைவாசி உயர்வு குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘அத்தியாவசியப் பொருட்களின் விலை தினமும் உயர்ந்து வருகிறது.
அரிசி, சர்க்கரை உட்பட பல்வேறு பொருட்களின் விலை கடந்த 6 மாதங்களில் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாத விலை நிலவரத்தின் படி ஒரு கிலோ அரிசி ரூ.55, இன்றைக்கு ரூ.75, ஒரு கிலோ வெங்காயம் ரூ.40, இன்று கிலோ ரூ.80, ஒரு கிலோ சர்க்கரை ரூ.40, இன்று ரூ.80 என உயர்ந்துள்ளது.
ஆளும்கட்சி கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதைக் கண்டித்து போராட்டமும் நடத்தியுள்ளன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘நமக்கு வறட்சி நிலவுகிறது. ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில், எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்
கப்பட்டது.
அதனால் விலை வாசியைக் கட்டுக்குள் வைத்தோம். எனவே தவெக அரசும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் கனேஷ்குமார் (பாமக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி பேசினர்.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலளித்துப் பேசியதாவது:
ஈரான் போர்...
ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
நமக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறியுள்ளது. எனவே, அரிசி, சர்க்கரை உட்பட 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதைக்கண்டறிந்து கட்டுப்படுத்து வதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
மேலும், ரேஷன் கடைகள் மட்டுமின்றி பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும். எனவே, விலையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்வோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.