மதுரை: சிவகங்கை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று முன்தினம் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள 3 பேரை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விபத்து ஏற்பட்ட 2 பேருந்துகளையும் இயக்கியவர்கள் ஒப்பந்த ஓட்டுநர்கள் அல்ல.
அரசுஓட்டுநர்கள்தான். இது கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய விபத்து. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். உரிய அனுபவமுள்ள, தகுதியான ஓட்டுநர்கள்தான் அரசு பேருந்துகளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போதுகூட 3 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு பெறும்போது அதற்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கூடுதல் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நீண்டதூர பேருந்துகளில் அனுபவமுள்ள ஓட்டுநர், நடத்துநர்களைத்தான் நியமிக்கிறோம். இந்த விபத்து ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றுள்ளது. காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுநர் மீது வழக்கு பதிவு: காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் சுதாகரின் கவனக்குறைவால்தான் இவ்விபத்து நடந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறா வயல் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில், அபாயகரமான முறையில் அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டி இறப்பு ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளில் சுதாகர் மீது நாச்சியார்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சரக்கு வாகன ஓட்டுநரான சுதாகர் சில வாரங்களுக்கு முன்புதான் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு பேருந்தை ஓட்டுவது தொடர்பான பயிற்சி அளிக்காமலேயே பணிபுரிய அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.