திருச்செந்தூரில் நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத், மதன்ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

 
தமிழகம்

திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ரூ.4,000 லஞ்சம்: அர்ச்சகர் உள்பட 5 பணியாளர்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று காலை மாஸ்க், டி-சர்ட் அணிந்து வந்து ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் பேரம் பேசி ஜிபேயில் பெற்ற கோயில் அர்ச்சகர் பிடிபட்டார். அவர் உள்பட கோயிலில் முறைகேடு தொடர்பாக 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் நேர் கேட் வழியாக சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் பேண்ட், டி-சர்ட், முகத்தில் மாஸ்க் அணிந்து, ஒரு உதவியாளர் மற்றும் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி ஆகியோருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் முகப்பில் அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் பேரம் பேசி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றதை பார்த்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளர் அங்கிருந்த கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அப்போது, 4 பேர் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் ஆகும் என பேரம் பேசி,பணத்தை ஜிபே வழியாக பெற்றுள்ளார். பின்னர் அதிகாரியிடம் பேரம் பேசி மாட்டிக்கொண்டதை அறிந்து, அர்ச்சகர் அங்கிருந்து நழுவியுள்ளார். தொடர்ந்து அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு அன்னதான மண்டபத்துக்குச் சென்றார். அங்கு கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு நுழைவுச் சீட்டு கொடுக்காமல் அன்னதான மண்டபத்துக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்துள்ளார்.

இதற்கிடையே அமைச்சர் ஆய்வு செய்வதை அறிந்து, கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், உள்துறை கண்காணிப் பாளர் ராமமூர்த்தி ஆகியோர் அங்குவந்தனர். அங்கிருந்த கோயில் பணியாளர்களிடம் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதி தரும்படி அமைச்சர் கேட்டுள்ளார்.

தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அன்னதானக் கூடத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல், கோயில் சண்முகவிலாச மண்டபம் முகப்பு, கடற்கரை, பக்தர்கள் தங்கும் விடுதி, கார் பார்க்கிங் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் விளக்கம்: முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் என்னிடம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.அதனைத் தொடர்ந்து ரகசியமாக ஆய்வு செய்யலாம் என்ற நோக்கத்தில் அதிகாலையில் முகக்கவசம் அணிந்து வந்தேன்.

அப்போது கோபுர முகப்பு பகுதியில் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதை கண்டுபிடித்தோம். அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், அவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு மன்னித்து விட்டுவிட்டதுபோல இணையத்தில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வாங்கியது மன்னிப்பு கடிதம் இல்லை. விளக்க கடிதம் தான் பெறப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபட்டுள்ளது, கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோயில் துய்மையை எவ்வாறு கடைபிடிப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்துவிட்டு செல்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளோம்.இந்த ஆய்வு அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு யாராக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்ற புகாரில் கோயில் அர்ச்சகர் ஞா.ஐயப்பன் என்பவர் கைங்கரிய பணிகள் செய்வதற்கு தடை விதித்து கோயில் இணை ஆணையர் ராமு உத்தரவிட்டுள்ளார். மேலும், முடி காணிக்கை மண்டபத்தில் பக்தர்களிடம் பணம் பெற்றதாக பணியாளர்கள் பா.சங்கர், வே.நாகராஜ் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பக்தர்களிடம் பணம் பெற்ற புகாரில் பாதுகாப்பு பணியாளர்கள் கே.கருப்பசாமி, அ.தோப்பு ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் மேற்கொண்ட இந்த ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சரின் இந்த நடவடிக்கைகளை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

4 அமைச்சர்கள் வருகை: இதனிடையே திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மீன்வளத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்,சிறு குறு தொழில் துறை அமைச்சர் பி.மதன்ராஜா ஆகியோரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் வருகையை அறிந்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா ஆகியோர் அமைச்சர்களை புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, வைகாசி விசாகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத், மதன்ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT