சென்னை: “நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால், இந்தப் பிரச்சினை தீராது” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அன்றும் சரி, இன்றும் சரி... நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என வலியுறுத்துகிறோம். நாங்கள் நீட் சீரமைப்பு பற்றி சொல்லவில்லை. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராமல் இந்தப் பிரச்சினை தீராது. அரசுப் பள்ளிகளை மூடுவதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. மாறாக, மாணவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.
பின்னர், ‘இங்கு நேற்று இரவு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி காவல் துறைக்கும், தமிழக காவல் துறைக்கும் வித்தியாசமே இல்லையா?’ என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. இரவு நேரம் என்பது முக்கியமான நேரம். வேலை முடித்து வீட்டுக்கு செல்லக்கூடிய அவசரம் இருக்கும். மற்றபடி போராடுவதற்கு எல்லாம் உரிமையும் இருக்கிறது. போராட்டம் என்பது முறையாக, ஜனநாயக முறையில் இருக்க வேண்டும்.
டெல்லியில் களத்தில் நின்று போராடிய எதிர்க்கட்சி தலைவரை பலவந்தமாக கைது செய்துள்ளனர். அவர் சாலையில் எல்லாம் போராடவில்லை. அவர்களுக்கும், நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை புரிந்துகொள்வதில் தான் உங்களுக்கு பாராபட்சம் இருக்கிறது” என்றார்.
பின்னர், மத்திய அரசை கண்டிப்பதில் அரசு சார்பில் தாமதம் ஏற்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘சில மணி நேர தாமதத்தை, தாமதம் என சொல்ல முடியாது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று நாங்கள் சொல்லவில்லை.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என தெளிவாக சொல்லிவிட்டோம். இது திட்டமிட்ட தாமதம் இல்லை; தரவுகளை திரட்டி, சரியான முறையில் சொல்வதில் தாமதம் ஏற்படுகிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்ற் அவர் கூறினார்.