சென்னை: “தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்சாரத் துறை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதற்கு முன்னர் இந்த யார் துறையை நிர்வகித்தார்கள் எனத் தெரியும்.
கடந்த ஓராண்டாக, மற்ற ஒப்பந்தப் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளில் 160 இடங்களில் பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன.
முதலில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். டெண்டர் எடுப்பதில் இனி எந்த மறைமுக டீலிங்கும் நடைபெறாது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.