சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேநேரம், கடந்த அதிமுக ஆட்சியில் 102 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் வேளாண் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.
அதற்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று பதிலளித்துப் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தினமும் போராட வேண்டியிருந்தது. அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஆனால், ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகள் எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கடந்த 2021-2022 முதல் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டில் வேளாண்துறைக்கு ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.47,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 102 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் அது போன்ற தற்கொலை சம்பவம் நிகழ்ந்தது இல்லை. விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் அதாவது இயற்கை இடர்பாடுகளுக்கு எல்லாம் உடனடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது. முதல்வரே நேரடியாக கள ஆய்வு செய்கிறார்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களின் நெல் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்புத் திட்டம், குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்சாகுபடி சிறப்பு தொகுப்பு, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம், தமிழ்நாடு உயிர்ம வேளாண்மை இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் என வேளாண் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டதுடன், 100 மதிப்புக்கூட்டும் மையங்கள், சிறந்த உயிர்ம வேளாண்மை உழவருக்கான ‘நம்மாழ்வார் விருது’, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், வேளாண் கல்வியில் தமிழ் பயிற்றுமொழி மற்றும் மாணவர் சேர்க்கை, 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் ஒரு தோட்டக் கலைக் கல்லூரி, பலா இயக்கம், முருங்கை இயக்கம், வெங்காய சாகுபடி இயக்கம், மிளகாய் மண்டலம், கறிவேப்பிலை தொகுப்பு, முக்கனி மேம்பாட்டுத் திட்டம், அதேபோல மா ஏற்றுமதிக்கான முனைப்புகள், புதிய பூங்காக்கள் உருவாக்கம், மின்னணு பயிர் சாகுபடி பரப்புக் கணக்கீடு, விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரமையமாக்குதல், உழவர் அங்காடிகள், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி, மேலும், குறுவை தொகுப்பு திட்டம் என திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படுகிறது. குறுவை தொகுப்புக்கு ரூ.482 கோடி நிதியை வழங்கி, அதன் மூலமாக 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.