சென்னை: ‘வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தின்மூலம் பொதுமக்களின் நேரமும், பயணச்செலவும் குறையும்’ என்று பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்முறை நிலம் மற்றும் வீடு வாங்குபவர்கள் பதிவுத்துறை அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே பதிவுசெய்யும் ‘வருகையில்லா ஆவணப்பதிவு திட்டம்’ ஆக.17-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இத்திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் பதிவுத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகையில்லாப் பதிவு முறை தொடர்பான செயல்விளக்கம் வழங்கப்பட்டது. மேலும், வங்கியாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டிட விற்பனையாளர்கள் முன்வைத்த சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பொதுமக்களுக்கு அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நோக்கில் அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்பங்கள் திறம்பட பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக நிலம் மற்றும் வீடுகளை முதல்முறை வாங்குபவர்களின் ஆவணங்கள் ஆக.17 முதல் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாதுகாப்பான முறை
இந்த நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பாதுகாப்பான முறையில் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இதனால் மக்களின் நேரமும், பயணச்செலவும் குறைவதுடன், பதிவு செயல்முறையின் தரமும் மேம்படும்.
இதுதவிர கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் இந்த புதிய நடைமுறையின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
தற்போது அளிக்கப்படும் பயிற்சிகளால் பதிவு ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் குறைந்து, பதிவு செயல்முறை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.