தமிழகம்

பேனரில் பின்னுக்கு தள்ளப்பட்ட பெயர்! - விருதுநகரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி எழுப்பிய கேள்வியால் பரபரப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் ஏன் முதலில் இடம் பெறவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ”ஸ்டார்ட் ரன்; ஸ்டாப் டிரக்ஸ்” போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார். பின்னர் சிலம்பம் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பரிசுகள் வழங்கினார்.

அப்போது, நிகழ்ச்சிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலிலும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் அதற்கு அடுத்தும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, “நான்தான் விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், எனது பெயரை ஏன் முதலில் பேனரில் போடவில்லை. நிகழ்ச்சிக்கு வராத அமைச்சரின் பெயர் முதலில் போட்டு உள்ளீர்கள்” என்று அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இது பற்றி அவரிடம் கேட்டபோது, “நிகழ்ச்சியில் வைக்கப்படும் பேனர் தொடர்பான புகைப்படங்கள் எனக்கு நேற்று மாலை அனுப்பி வைத்தனர். அதில் எனது பெயர் ஏன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், எனது பெயரை முதலில் குறிப்பிடும் படியும் அறிவுறுத்தினேன். ஆனாலும் அதை அதிகாரிகள் மாற்றவில்லை. அதனால் தான் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் கேள்வி எழுப்பினேன்” என்றார்.

பின்னர், டீன் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது. அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு ரத்த அழுத்த பரிசோதனை, நீரழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. எக்கோ பரிசோதனையும் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT