சென்னை: தொழில்நுட்பக் கோளாறால், சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் நடுவழியில் மெட்ரோ ரயில் நேற்று அதிகாலை திடீரென நின்றது. இதனால், தவித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவான, பாதுகாப்பான, சொகுசான பயணத்துக்கு ஏற்றதாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்கிறது.
மேலும், மழைகாலத்தில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறால், சுரங்கப்பாதையில் நடுவழியில் மெட்ரோ ரயில் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சென்ற போது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சுரங்கப் பாதையில் நடுவழியில் மெட்ரோ ரயில் நின்றது. இதனால், பயணிகள் குழப்பமடைந்தனர்.
இதுதவிர, மின்சாரம் தடைப்பட்டு ரயிலுக்குள் இருந்த மின்விளக்குகளும் அணைந்தன. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் கடும் அச்சமும், பீதியும் அடைந்தனர்.
சுரங்கப் பாதையில் பயணிகள் ரயிலில் சிக்கி 10 நிமிடத்துக்கு மேல் இருந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், அருகில் உள்ள நீதிமன்றம் நிலையத்துக்கு பயணிகள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் சுரங்கப் பாதையை ஒட்டி, நடைபாதை வழியாக நடந்து சென்றனர். 500 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று, உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை அடைந்தனர்.
அவசர காலத்தில் பயணிகள் சுரங்கப் பாதையில் இருந்து வெளியே வர அமைக்கப்பட்ட வழியாக, ஒவ்வொரு பயணியாக வரிசையாக சென்றனர்.
சுரங்கப் பாதையில் இருளில் சிக்கிக் கொண்ட பயணிகள் வெளியே வந்த பிறகு, நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தொழில்நுட்பக் கோளாறால், உயர்நீதிமன்ற நிலையம் - சென்னை சென்ட்ரல் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 6.20 மணி முதல் மெட்ரோ ரயில் வழக்கம் போல இயங்கத் தொடங்கின” என்று தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.