எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீடு) 7,157 எம்பிபிஎஸ் இடங்கள், 1,383 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 537 எம்பிபிஎஸ் இடங்கள், 104 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,966 எம்பிபிஎஸ், 580 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கி, ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 72,633 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று வெளியிட்டார். சுகாதாரத் துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) வா.லோகநாயகி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணை இயக்குநர்கள் (தேர்வுக் குழு) கராமத், பாலநாக நந்தினி, சாந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 35,926 பேர், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு 3,625 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,956 பேர் இடம் பெற்றுள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த அவர், தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டை மாணவி வி.னிகா 700 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும், விருதுநகர் மாணவர் ஏ.எம்.சுடர் 696 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 5 மாணவர்கள், 5 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் நாகப்பட்டினம் மாணவர் எம்.தினேஷ் 599 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், சேலம் மாணவர் பி.எஸ்.தரனீஷ் 595 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும், புதுக்கோட்டை மாணவர் ஆர்.ராஜேஷ் 595 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆக.13-ம் தேதி https://tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் தொடங்குகிறது.
அதேநாளில், சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகச் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
போலி ஆவணம்: இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 700 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டை விட 200 பிடிஎஸ் இடங்கள் குறைந்துள்ளன. மருத்துவப் படிப்பில் சேருவதற்காகக் கடந்த 2024-ம் ஆண்டில் 9 பேரும், 2025-ம் ஆண்டில் 25 பேரும், இந்த ஆண்டில் 5 பேரும் போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவர் நீட் தேர்வில் தான் எடுத்த 170 மதிப்பெண்ணை, 552 ஆக திருத்தியுள்ளார். என்ஆர்ஐ பிரிவில் 512 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தூதரக சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கும், நமது கொள்கைகளுக்கும் எதிரானது. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கல்லூரி கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது உறுதியாகி உள்ளதால், அந்த விவகாரம் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலையும் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.