தூத்துக்குடி: அரசியலில் வலுவான பங்களிப்பைப் பெற இடதுசாரி அணி தனியாக உருவாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் 12-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது.
கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசும்போது, “வாக்குரிமை பறிப்பு என்பதை ஆழமாக சிந்தித்தால் குடியுரிமை பறிப்பாகும்.
சாதி, மதம், மொழி தொடர்பான தீர்ப்புகளில் நீதிபதிகள் நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறார்கள். மதச் சார்பின்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் இருக்கும்வரை அது நடக்காது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஜனநாயகத்துக்கான போரைத் தொடங்கிவைத்துள்ளார்.
மதத்தின் பெயரால் பாஜக தொடங்கியிருக்கிற கருத்தியல் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: மாநிலங்களில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ தொடங்கி தற்போது நீதித் துறையையும் பயன்படுத்துகிறார்கள். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளின் ஒற்றுமை மிகவும் அவசியம்.
எனவே, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், பல முற்போக்கு அமைப்புகளை கொண்ட இடதுசாரி அணியை உருவாக்க வேண்டும். மதவாத கட்சிகளை எதிர்த்துப் போராட மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை அவசியம்.
அதேநேரத்தில் மத, தாராளமய கொள்கைக்கு மாற்றாக ஒரு இடதுசாரிக் கொள்கையை, தொழிலாளர் நலனை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கையை, ஒரு மாற்றுக் கொள்கையை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.
அந்த மாற்றுக் கொள்கையை முன்வைத்து இடதுசாரி அணி உருவாக வேண்டும். நாம் பலமில்லாமல் போனால் நாம் நினைக்கிற மாற்றத்தை அரசியலில் ஏற்படுத்த முடியாது.
எனவே, வலுவான இடதுசாரி ஜனநாயக மாற்றை உருவாக்க அனைவரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திபங்கர், தமிழக அமைச்சர் பி.கீதாஜீவன். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் திருச்சி செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.