கோவை: இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 கோடி பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 1 கோடி பேல் தரம் மிகவும் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஜவுளித் தொழில் துறையினர், மத்திய அரசு பருத்தி இறக்குமதி வரி விலக்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ‘ஆர்டிஎப்’ அமைப்பு தலைவர் ஜெயபால், ‘சைமா’ தலைவர் துரை.பழனிசாமி, முன்னாள் தலைவர்கள் சுந்தரராமன், ரவிசாம், ‘சிட்டி’ முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்திய ஜவுளித் தொழில் தற்போது புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 350 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் தரம் குறைவான பருத்தி தற்போது மிகவும் அதிகம் காணப்படுகிறது. ஒரு கோடி பேல் பருத்தி வரை தரம் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதற்கு முன்பு 11 சதவீத வரி விதிக்கப்பட்டது. பருத்தி விலை உயர்வால் போட்டித் திறன் பாதிக்கப்படுவதாகவும், இறக்குமதி வரியை நீக்கி உதவ வேண்டும் எனவும் பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தது. இந்த வரி விலக்கை மத்திய அரசு தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டில் பருத்தியின் தரம் குறைந்துள்ளதால், இறக்குமதிக்கான வரி விலக்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உதவ வேண்டும்.
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் இறக்குமதி வரி விலக்கை நீட்டிப்பதால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
மேலும், ஏற்றுமதிக்கான பணி ஆணைகளை பெறும்போது வெளிநாட்டு நிறுவனங்கள் பருத்தியின் தரம் (திடத்தன்மை) குறித்து மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். இதனால் தரமான பருத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பருத்தியின் தரம் குறைந்து காணப்படுவதால், நூல் உற்பத்தியில் விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை கலக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பருத்தியின் தரத்தை அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறப்பு மானியத் திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை நீட்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.