கும்பகோணம்: கடந்த ஆட்சியின் முறைகேடுகள் அனைத்தும் விரைவில் வெளியே தெரியவரும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
கும்பகோணத்துக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கும்பகோணத்தில் 2028-ல் மகா மகம் நடத்துவது தொடர்பாக, வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் முதல்வரிடம் வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். மாநிலத்தின் வருவாய் மிகப் பெரிய வீழ்ச்சியடைந்த விவகாரத்தில் உள்ள லீக்கேஜ்கள் வரும் நாட்களில் அடைக்கப்படும். லீக்கேஜ்கள் அடைக்கப்பட்டாலே வருவாய் சீராகிவிடும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுப்பது என முதல்வர் முடிவு செய்வார். பின்னர், அனைத்தும் அனைவருக்கும் விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் வினோத் உடனிருந்தார். முன்னதாக, அமைச்சர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.