மன்னார்குடியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ எஸ்.காமராஜ்.
திருவாரூர்: தவெகவை ஆதரித்தது ஏன்? என மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்.
விஜய் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, இவர் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஒரு கடிதம் வெளியானது. ஆனால், அந்தக் கடிதம் போலியானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், எம்எல்ஏ காமராஜும் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய எம்எல்ஏ எஸ்.காமராஜ், தவெக அரசுக்குத் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்னர் நேற்று மன்னார்குடி வந்த எஸ்.காமராஜுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது: பேரவைத் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியால், அரசியல் ஜாம்பவான்கள் பலரும் தோற்றுப் போய்விட்டனர்.
மன்னார்குடியிலும் அத்தகைய எழுச்சி இருந்தபோதிலும், தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில், கூட்டணி கட்சியினர் மற்றும் உங்களது உழைப்பால் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அரசியல் சூழலுக்கு ஏற்ப...
இதனால், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இந்த முடிவை 99 சதவீதம் பேர் சரி என தெரிவித்துள்ளனர். ஒருசிலர், காலம் தாழ்த்தி எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்கள்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தால் திட்டங்களை மக்களுக்கு எளிதாக பெற்றுத்தர முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த டிஆர்பி.ராஜா யாராலும் செய்ய முடியாத நல்ல திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி தந்துள்ளார்.
அவர் நன்றி அறிவிப்பின்போது சங்கடப்பட்டு பேசியதை அறிந்து, நானே அவரை தொடர்பு கொண்டு, அரசியலையும் தாண்டி நமது நட்பு தொடர வேண்டும் என கேட்டு கொண்டேன்.
அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதை எனது கடமையாக கொண்டு செயல்படுவேன் என தெரிவித்தார்.