சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவதை வெறும் `பேப்பர் லீக்' என கடந்துவிட முடியாது. இது இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களமாக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய பாஜக அரசு `டிஜிட்டல் இந்தியா' என மேடைக்கு மேடை முழங்குகிறது. மத்திய அரசின் மவுனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாஃபியா உருவாகியுள்ளது.
கல்வி முறையை டிஜிட்டல் ஆக்குவதற்குப் பதிலாக, இந்தத் தேர்வு மோசடித் தொழிற்சாலையைத்தான் நீங்கள் டிஜிட்டல் மயமாக்கி மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்த்து வைத்துள்ளீர்கள். 2015-க்குப் பிந்தைய காலகட்டத்தில் தேர்வு கேள்வித்தாள் கசிவு 70 சதவீதமாக உள்ளது.
இரக்கமற்ற இந்த முறைகேடுகளாலும், தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் பல அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இது வெறும் `பேப்பர் லீக்' என கடந்துவிட முடியாது. இது இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக்களமாக உருவெடுத்துள்ளது. கேள்வித்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு இந்த ஆட்சியில் கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது.
பில்லியன் டாலர் மதிப்புள்ள கோச்சிங் சென்டர்களாலும், மோசடி கும்பலாலும் கல்வித் துறை அதிகாரிகளும், முதலாளிகளும் மட்டுமே கோடிகளைக் குவிக்கிறார்கள்; மாணவர்களுக்கு மிஞ்சுவது மரணமும் ஏமாற்றமும் மட்டுமே.
நீங்கள் நடத்துவது அரசாங்கமா, இல்லை கேள்வித்தாள் ஆலோசனை மையமா?. இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.