| படம்: ம.பிரபு |
சென்னை: "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தங்களை தமிழக அரசு கைது செய்துள்ளது" என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது, இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கு மத்திய அரசு உரியபதில் அளிக்கவில்லை. தங்களது உரிமைகளுக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை பயன்படுத்தி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்தப் போராட்டத்தை நடத்தினோம். அவர் டெல்லியில் இருந்து சென்னை வரும்போது நேரடியாகச் சென்று எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மாறாக, எங்களை கைது செய்துள்ளனர். அமித்ஷா அரசியல் செய்வதற்காகவே தமிழகத்துக்கு வருகிறார். தென் மாநிலங்களில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நலன் குறித்து தமிழக முதல்வர் உரிய முறையில் பேசுவார் என நம்புகிறோம்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.