தமிழக காங்கிரஸில் சர்ச்சைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் சூழலில், "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் ஒரு ரவுடியைப் போன்றவர்" எனச் சொல்லி மணிசங்கர் அய்யர் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி: இண்டியா கூட்டணியில் தலைவராக தகுதியிருக்கும் நபர் ஸ்டாலின் தான். அவரால் தான் இக்கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும். அவரால் மட்டும் தான் இக்கூட்டணியை ஒன்று சேர்க்க முடியும். காமராஜர் இருந்த இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கின்றார். ஒருகட்டத்தில் நேருவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்குமாறு காமராஜரிடம் கேட்டோம். ஆனால் இந்திய பிரதமராக பதவியேற்க காமராஜர் மறுத்துவிட்டார்.
அந்த இடத்தில் தான் தற்போது ஸ்டாலின் இருக்கின்றார். கண்டிப்பாக ராகுல் காந்தி இந்திய பிரதமராக பதவி ஏற்க ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார். இந்தியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராக வேண்டும். இன்று காங்கிரஸில் வெற்றிக்கான பயணம் இருப்பதாக தெரியவில்லை. கட்சியின் பொறுப்புக்களில் இருப்பவர்கள் கட்சியை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் ஒரு ரவுடியைப் போன்றவர். அவரால் காங்கிரஸை வளர்க்க முடியாது. அவரை படேல் போன்று முன்னிறுத்தும் காங்கிரஸ் எப்படி வளரும். காங்கிரஸ் தன்னை முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.