சென்னை: ‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார்.
இது குறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘மக்கள் மேடை என்ற இயக்கத்தை தொடங்குகிறோம். இந்த மாநிலத்துக்காக வேலை செய்ய நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றாக சேரலாம். ஒன்றாக சேர்ந்து, எங்களை தொடர்பு கொண்டு, ஒரு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த மாநிலத்துக்கு பல நன்மைகளை செய்ய முன்வாருங்கள்.
ஒன்றாக சேருவோம், ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம். மக்கள் மேடை இயக்கத்தில் சாமானிய மக்கள் அனைவரும் இணையலாம். நல்ல சிந்தனையும், நாட்டுக்கு வேலை செய்யும் மனமும் உள்ள அனைவரும் எங்களை தொடர்பு கொள்ளலாம். மூத்த குடிமக்கள், குடிமைப்பணி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினர் என அனைவரும் தங்களின் அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கலாம்.
எங்களுடன் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டுக்காகவும், அந்தந்த தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். மாநிலத்துக்காக வேலை செய்யும் உள்ளூர் தலைவர்களை உருவாக்கலாம். எனவே அனைவரும் இந்த இயக்கத்தில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.