இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 101-வது பிறந்தநாள் விழா, அமீர் அதைர்கான், கே.டி.கே.தங்கமணி நினைவு தினம் ஆகிய நிகழ்வுகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் நினைவகத்தில் நேற்று நடைபெற்றன. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த தலைவர்கள் இரா.முத்தரசன், கே.சுப்பராயன், ஜி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101-வது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இத்துடன் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கிய பங்குவகித்த அமீர் ஹைதர்கான் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே.தங்கமணி ஆகியோரின் நினைவு நாளையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளுக்கு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கொடி ஏற்றி வைத்தார். செந்தொண்டர் அணிவகுப்பு நடந்தது.
பின்னர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் 80 பேரை மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மு.வீரபாண்டியன் கவுரவித்தனர். அப்போது கே.சுப்பராயன் எம்.பி. உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறும்போது, “இந்தியாவிலே தமிழகம்தான் நல்லிணக்க பூமி. இங்கு பெரும்பான்மையான இந்து மக்கள்தான், சிறுபான்மையினரின் அரணாக நிற்கின்றனர். இந்த ஒற்றுமையை சிதைக்கும் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எத்தகைய வியூகங்களை வகுத்தாலும், அவர்களை தமிழகம் தோற்கடிக்கும்” என்றார்.