கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த 1996-ம் ஆண்டு ஹைலைட் குழுமம் தொடங்கப்பட்டது. இக்குழுமம் கேரளாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிக மையமான ‘ஃபோகஸ் மால்’ முதல், கோழிக்கோடு மற்றும் திருச்சூரில் உள்ள பிரம்மாண்டமான ‘ஹைலைட் மால்கள்’ வரை பல திட்டங்களை கட்டி முடித்துள்ளது.
இந்நிலையில், தனது 30-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, 47 ஊழியர்களின் பணியைப் பாராட்டி ரூ.20 கோடி மதிப்பிலான கார்களைப் பரிசாக வழங்கியுள்ளது. இதில் ரேஞ்ச் ரோவர், ஆடி க்யூ8 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்ற சொகுசு கார்களுடன், டாடா ஹாரியர், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட மாடல்களும் அடங்கும்.
தங்கள் ஊழியர்களுக்காகச் செய்யப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய முதலீடு, நிறுவனத்தின் ‘மனிதநேய அணுகுமுறை’ மற்றும் ஊழியர்கள் மீதான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைலைட் குழுமத்தின் தலைவர் பி. சுலைமான் கூறும்போது, “கடந்த முப்பது ஆண்டுகளாக, கேரளாவின் உள்கட்டமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.