சி.வி.சண்முகம்|கோப்புப் படம்
சென்னை: ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காட்டமாக கண்டித்துள்ளனர்.
விழுப்புரத்தில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை விட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் எனக் கூறுகிறார். எனக்கு இவர் (ஒரு நடிகையின் பெயர்) வேண்டும், கனவை நிறைவேற்றுவாரா?’ என பேசியது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இது குறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோதிமணி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அதிமுகவின் சி.வி.சண்முகம், ஒரு நடிகை குறித்துப் பொதுவெளியில் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக, ஆபாசமாகப் பேசுவதை நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது.
திரைத்துறையில் ஒரு வெற்றிகரமான பெண், இன்னொருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் பல்வேறு போராட்டங்களைக் கடந்து, தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது, பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டப்படியும் தவறு.
அரசியல் மேடைகளில் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பல்வேறு தடைகளை, போராட்டங்களைக் கடந்து தான் சார்ந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்கும் பெண்களை மீண்டும் மீண்டும் உடலாக மட்டுமே பார்க்கும், அவமதிக்கும் மனநிலையை நாம் ஒரு சமூகமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் உணர முடியும்.
சி. வி சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.