சென்னை: ‘பேரறிவாளன் சட்டப்படி தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டதில் என்ன தவறு உள்ளது? ’ என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்த பேரறிவாளன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சட்டப்படிப்பு படித்து, கடந்த ஏப்.24 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில், பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், பேரறிவாளன் கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளாரேயன்றி, குற்றவாளி இல்லை என கூறப்படவில்லை.
மேலும், குற்ற வழக்குகளில் சிறை தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகள் விடுதலையான 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராக தங்களைப் பதிவுசெய்து கொள்ள அனுமதிக்கும் வழக்கறிஞர் சட்டப்பிரிவையும் சட்டவிரோதமானது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும். பேரறிவாளனை வழக்கறிஞராகப் பதிவு செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குற்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை ஆன 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர்கள் சட்டம் அனுமதிக்கும்போது, பேரறிவாளன் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வழக்கில் இருந்து சிபிஐ-யை நீக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் உள்ளிட்டோர் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.