அரசியல் விமர்சகர் பொன்ராஜ்
சென்னை: தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய்-க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ்-க்கு எதிராக, கடந்த மார்ச் 26-ம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், மே 12-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூர் போலீஸாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு வழக்குகள் தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, யூடியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள் நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சர்களாக உள்ள இருவர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்ப கட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவரின் செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப் படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.