உரிய ஆவணங்கள் இல்லாததால் கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள்.
கோவை/திருப்பூர்: கோவை மற்றும் பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12.93 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 9-வது பறக்கும் படையினர் அலுவலர் சாமிநாதன் தலைமையில் நேற்று கொடிசியா சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவிநாசி சாலை நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
வேனில் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், 8.47 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரம் ஆகும். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், அலுவலர்கள் நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.2.75 கோடி நகை
இதேபோல், திருப்பூர் மாவட்டம் பல்லடம், செட்டிபாளையம் சாலை பிரிவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றவேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் கூரியர் பில்மட்டும் வைத்துக்கொண்டு தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் 15 பெட்டிகளில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2.75 கோடியாகும்.
திருப்பூரில் உள்ள நகைக் கடைக்கு டெலிவரி செய்வதற்காக நகைகளை கொண்டு செல்வதாக வேன் ஓட்டுநர் தெரிவித்தார். எனினும் உரிய ஆவணம் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணனிடம் ஒப்படைத்தனர்.